

***காலை ஜெபம்***
"ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்".
(திருப்பாடல் 116: 12-18)
என் அன்புக்குரிய இயேசு கிறிஸ்துவே, இந்த காலை வேளையில், என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும், புதிய கட்டளையை அளித்த எங்கள் ஆண்டவரே, நான் பிறரிடத்தில் எந்த பலனையும் எதிர்பார்க்காது, தூய அன்பை செலுத்த எனக்கு அருள் புரியும்.
சீடர்களுக்கு பாதம் கழுவி, தாழ்ச்சியை வெளிப்படுத்திய என் தேவனே!, நான் ஆணவம், திமிர் ஆகியவற்றை விட்டுவிட்டு, தாழ்ச்சியை மட்டும் கைக்கொள்ளும், மேலான வரத்தை எனக்குத் தந்தருளும்.
இன்று, எங்களுக்காக குருத்துவத்தை தோற்றுவித்த தந்தையே! தங்கள் வாழ்க்கையை உமக்காக அர்ப்பணித்த அனைத்து குருக்கள் மற்றும் கன்னியர்களுக்காக விஷேசமாக வேண்டுகிறோம். உம்மை மட்டுமே நம்பியிருக்கும் அவர்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். அலகைக்கு எதிரான போராட்டத்தில், உமது அருட்பணியாளர்களுக்கு என்றென்றும் ஜெயத்தினைத் தந்தருளும். அவர்களுக்கு எதிரான, அலகையின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்துப் போடும். அவர்களது இறைப்பணியை பரிபூரணமாக ஆசீர்வதித்தருளும்.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.