

***MORNING PRAYER***
காலை ஜெபம்
"நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;
அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்".
(திருப்பாடல் 105: 16-21)
தாழ் நிலையில் இருப்போரை, உயர் நிலைக்கு உயர்த்துபவரே! ஒதுக்கப்பட்ட மனிதருக்கு, மேன்மையை அளிப்பவரே! கட்டுவோர் புறக்கணித்த கல்லை, கட்டிடத்தின் மூலைக்கல்லாக ஆக்குபவரே! உம்மை வாழ்த்தி, வணங்கி, ஆராதனை செய்கிறோம். அற்புதங்கள் செய்யும் எங்கள் அன்பரே! உம்மைப் போற்றி, துதித்து நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! நீர் எங்கள் வாழ்வில் செய்த அனைத்து வியத்தகு செயல்களையும், நாங்கள் நினைவுகூர்ந்து நன்றி கூறுகின்றோம்.
அப்பா!, அன்று அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை, நீர் அரண்மனைப் பொறுப்பாளனாக உயர்த்தியது போல, என் வாழ்வில் எந்தெந்த இடங்களிலெல்லாம் நான் புறக்கணிக்கப்பட்டேனோ, எந்தெந்த இடங்களிலெல்லாம் நான் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டேனோ, அவ்விடங்களில் எல்லாம், உமது அருளால் என்னை உயர்த்துவீராக.
இறைவா! என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினாலே, என்னை பரிசுத்தப்படுத்தும். என்னை உமக்கு சொந்தமாக்கும். இன்று முழுமையாக என்னை உமது திருநாமத்தின் பாத்திரமாக, உம்முடைய ஆவியின் ஆலயமாக என்னை பயன்படுத்தும்.
இறைவா! இத்தவ நாட்களில் நாங்கள் உம் திருமுகத்தை தேடவும், உம் திருவழியில் நடக்கவும், எங்கள் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு விலகவும் அருள்புரியும்.
இயேசு, மரி!, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.