

***MORNING PRAYER***
திருப்பாடல் : 139
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.
(திருப்பாடல் 139: 1-3. 13-14.)
ஜெபம்
"மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது" என கூறிய என் அன்பு தெய்வமே! மாறாத உமது பேரன்பினால் மானிட குலத்தை மன்னித்து மீட்டருளுனீரே! "நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்." என்று கூறிய எங்கள் இரக்கத்தின் தேவனே! உம்மை வாழ்த்தி, வணங்கி, போற்றி ஆராதனை செய்கிறேன்.🙏
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீரே என்னைக் கைதூக்கிவிட்டீர்;
தந்தையின் அன்பார்ந்த திருமகனே! எங்கள் இயேசுவே! உம் பொருட்டு தந்தை பூரிப்படைந்தது போல உம் பிள்ளைகளாகிய எங்களைக் குறித்து நீர் பூரிப்படையும் வகையில் நாங்கள் நடந்து கொள்ள தூய ஆவியானவரின் துணையை நாங்கள் நாடுகின்றோம்.
இயேசுவே! உமது மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்று கூறிய திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியை நாங்கள் எப்பொழுதும் கைக்கொள்ள அருள் புரிவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.